மகனுடன் பைக்கில் சென்ற தாய் விபத்தில் பலி

கோவை, மே.25: கோவை அருகே மகனுடன் பைக்கில் சென்ற தாய் விபத்தில் பலியானார். ரோட்டின் குறுக்கே நாய் திடீரென பாய்ந்ததில் இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.  திருப்பூர் ராக்கிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. பனியன் கம்பெனி தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தா(44). இவர்களுடைய உறவினர் ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார். எனவே துக்கம் விசாரிப்பதற்காக வசந்தா தனது மகன் சங்கருடன்(24) பைக்கில், நேற்று முன்தினம் பொள்ளாச்சி அடுத்த மீனாட்சி புரத்திற்கு சென்றார்.

பின்னர் துக்கம் விசாரித்து விட்டு தாயும், மகனும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் நெகமம் அடுத்த காட்டம்பட்டி அருகே பைக்கில் வரும்போது திடீரென நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. அப்போது சங்கர் பிரேக் போட்டதில் பின்னால் அமர்ந்திருந்த வசந்தா கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: