வறட்சி, வரத்து குறைவால் தக்காளி, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் விலை கிடுகிடு உயர்வு

உடுமலை,மே 25:  வறட்சி, சீதோஷ்ணநிலை மற்றும் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி, சின்னவெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதாலும், பருவமழை பொய்த்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி சாகுபடி செய்யும் பரப்பும் குறைந்துள்ளது.

கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சின்னவெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், தரமற்ற விதைகள் மற்றும் விலைசரிவின் காரணமாக கடந்த 3 மாதமாக சாகுபடி பரப்பை குறைத்தனர். இதன் காரணமாக சந்தைக்கு தற்போது சின்னவெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

முன்பெல்லாம் சின்னவெங்காயம் பயிரிட்டால் ஏக்கருக்கு 7 டன் வெங்காயம் கிடைத்து வந்த நிலையில் பருவமழை இன்மை, தரமற்ற விதை காரணமாக தற்போது சராசரியாக ஏக்கருக்க 4 முதல் 5 டன் வரை மட்டுமே மகசூல் கிடைக்கிறது. இதே போல 3 மாதங்களுக்கு முன்பு ஒரு ஏக்கரில் தக்காளி பயிரிட்டால் ஆயிரம் பெட்டி( ஒரு பெட்டிக்கு 14 கிலோ) தக்காளி அறுவடை செய்த நிலையில் தற்போது 50 பெட்டி தக்காளியே கிடைக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க உடுமலை தாலுகா செயலாளர் பாலதண்டாபாணி கூறுகையில்: கடந்த 3 மாதத்திற்கு முன்பாக பெரிய அளவில் விவசாயம் செய்த காய்கறி விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கான விலை கிடைக்கவில்லை. ஜனவரி மாதம் தக்காளி ஒரு பெட்டி(14 கிலோ) ரூ.30 முதல் ரூ.40 வரை விலை போனது.

தற்போது ஒரு பெட்டி ரூ.600 முதல் ரூ.620 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதே போல ஜனவரி மாதம் ரூ.6 முதல் ரூ.10 வரை கொள்முதல் செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது வரத்து குறைந்ததால் ரூ.40 முதல் ரூ.43 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பச்சை மிளகாயும் தற்போது கிலோ ரூ.47 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.தற்போது சிறு,குறு விவசாயிகள் மட்டுமே இவற்றை குறைந்த பரப்பில் பயிரிடுகின்றனர்.

நல்ல விலை கிடைத்து சிறு விவசாயிகள் மகிழ்ந்த போதும், கடந்த காலங்களில் பெரி அளவில் காய்கறி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டமடைந்ததாலேயே தற்போது இவற்றின் வரத்து சந்தைக்கு குறைந்துள்ளது. மேலும் தற்போது காய்கறி நுகர்வும் குறைந்துள்ளது. தரமற்ற விதைகள்,தண்ணீர் பற்றாக்குறை, நோய் தாக்குதல்,சாகுபடி பரப்பு குறைந்தது ஆகியவற்றால் தக்காளி,சின்னவெங்காயம்,பச்சைமிளகாய் விலை உயர்ந்து வருகிறது. 20 நாட்களில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சின்னவெங்காயம் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் தமிழகத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது. ஆனால் தக்காளி,பச்சை மிளகாய் விலை குறைய வாய்ப்பில்லை. இவ்வாறு பாலதண்டாயுதபாணி கூறினார்.

Related Stories: