உசிலம்பட்டி, மே 25: உசிலம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகை கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உசிலம்பட்டி அருகேயுள்ளது எ.ராமநாதபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (28). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, உசிலம்பட்டி மருத்துவமனையில் பிரசவத்திற்காக சிகிச்சையில் உள்ள அவரது மனைவியை பார்க்கச் சென்றுவிட்டார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவில் கடப்பாறையை சொருகி பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு அதிலிருந்து 11 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதேபோல் இதே ஊரைச் சேர்ந்த அழகுராஜா என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது. அங்கு எந்த பொருட்களும் கிடைக்காமல் மர்ம நபர்கள் திரும்பி சென்றுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் உசிலம்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டை போலீசார் சோதனை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.