அஜீஸ்நகர் மேம்பாலம் அருகில் இணைப்பு சாலை அமைக்க கோரிக்கை

உளுந்தூர்பேட்டை, மே 25: உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அதிக விபத்துகள் அடிக்கடி நடக்கும் பகுதியாக உள்ளது அஜீஸ்நகர். இப்பகுதியில் உள்ள மேம்பாலத்தின் வழியாக திருச்சி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் மேல் வழியாக சென்னையை நோக்கி செல்கிறது. அவ்வாறு வரும் வாகனங்கள் திருச்சி சாலையில் இருந்து உளுந்தூர்பேட்டை சாலையில் திரும்பும் இருசக்கர மற்றும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மீது அடிக்கடி மோதி விபத்துக்குள்ளாகி வருகிறது. இதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தும், படுகாயம் அடைந்தும் வருகின்றனர். இந்த மேம்பாலத்தின் அருகில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் பல ஆண்டுகாலமாக கோரிக்கை வைத்தும், இதுவரையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெரிய அளவிலான விபத்துகள் நடைபெறும் முன், அஜீஸ்நகர் மேம்பாலம் அருகில் இணைப்பு சாலை போடும் பணியை துவங்கிட வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: