விழுப்புரம், மே 25: விழுப்புரம் காந்திசிலை அருகே சாலை விரிவாக்க பணிகள் முடிந்த பகுதியில் மீண்டும் நடைபாதை கடைகளை வைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பு செய்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே துவக்கத்திலேயே காவல்துறை இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாக உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள் ஒருபுறம் இருப்பினும், சாலையோர நடைபாதை கடைகள், சாலையோரத்தில் தாறுமாறாக இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக நான்கு முனை சந்திப்பு முதல் நேருஜி சாலையில் ரயில்வே மேம்பாலம் வரை கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. 60 சதவீத பணிகள் முடிந்துள்ளது.