பண்ருட்டி, மே 25: பண்ருட்டி அருகே காடாம்புலியூர் பகுதியில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சென்று பார்த்தபோது ஏரிகரையில் சாராயம் விற்பனை செய்த ராஜ்மோகன்(30) என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் பிரகாஷ்(26) என்பவர் தனது வீட்டின் பின்பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்தபோது கைது செய்து, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சந்திரசேகர்(36) என்பவரை கைது செய்து, 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முத்தாண்டிகுப்பம் பகுதியில் ஜெய்சங்கர்(34), உத்திராபதி(39), மாணிக்கவேல்(40), ஐயப்பன்(34), பூராசாமி(40) ஆகியோரை கைது செய்து 115 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முத்தாண்டிகுப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவனூரை சேர்ந்த மணி(38) என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இவரை கைது செய்ததுடன், அவரிடமிருந்த 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காந்திநகரை சேர்ந்த ராமச்சந்திரன்(52) என்பவர் தனது வீட்டில் மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்ததை கையும் களவுமாக பிடித்து கைது செய்ததுடன், அவரிடமிருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.