கோவில்பட்டி, மே 25: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் அச்சையா எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி உத்தரவின்பேரில் கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் அச்சையா ஆலோசனைப்படி கோவில்பட்டி நகரில் அண்ணா பேரூந்து நிலையம் மற்றும் மெயின்ரோடு பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிறதா? என நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.இதில் 56 கடைகளில் ஆய்வு நடந்தது. 6 கடைகளில் தடை செய்யப்பட்ட, 21 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அச்சையா கூறியதாவது: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை கண்டறிய நகராட்சி சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பதற்காக 6 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நகராட்சி விதிகள் (2வது திருத்தம்) சட்டம் 2019ன்படி இனிவரும் காலங்களில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முதல்முறையாக கண்டறியப்பட்டால் ரூ.25 ஆயிரமும், 2வது முறையாக கண்டறியப்பட்டால் ரூ.50 ஆயிரமும், 3வது முறையாக கண்டறியப்பட்டால் ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். மேலும் தொடர்ந்து இதனை மீறும்பட்சத்தில் கடை உரிமம் ரத்து செய்யப்படும், என்றார்.