சேரகுளம் அருகே வாலிபர் வெட்டி கொல்லப்பட்டது ஏன்?

செய்துங்கநல்லூர், மே 25: சேரகுளம் அருகே தெற்குகாரச்சேரியை சேர்ந்தவர் கந்தன் மகன் தங்கபாண்டி (27). இவருக்கும், இதே ஊரை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. உறவினர் பெண்ணை கேலி செய்ததாக ராமசுப்பிரமணியனை, தங்கபாண்டி எச்சரித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா செய்வதிலும் இவர்கள் இருவரிடையே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் கால்வாய் கிராமத்தில் இருந்து பைக்கில் தங்கபாண்டி தெற்குகாரச்சேரி திரும்பி கொண்டிருந்தார். அவர், வல்லகுளம் சாஸ்தா கோயில் விலக்கு அருகே வரும்போது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் முகத்தில் பலத்த வெட்டு காயமடைந்த தங்கபாண்டி, சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்த வைகுண்டம் டிஎஸ்பி சகாயஜோஸ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன்,  சேரகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தங்கபாண்டி உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தங்கபாண்டியை கொலை செய்தது ராமசுப்பிரமணியன், சுந்தரம், முருகன், உய்க்காட்டான் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்து 4 பேரையும் தேடி வருகின்றனர். இதனிடையே தங்கபாண்டி உறவினர்கள் ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 4 பேரின் வீட்டை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் தெற்குகாரச்சேரியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  தொடர்ந்து பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கொலையான தங்கபாண்டி மீது சேரகுளம் காவல் நிலையத்தில் 4 வழக்குகள் உள்ளது.

Related Stories: