×

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பல்

* குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்


* பொதுமக்கள் கடும் அச்சம்

திருவண்ணாமலை, மே 25: திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடர்கள் கொள்ளையடிக்கும் சம்பவத்தால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ளது வேங்கிக்கால் ஊராட்சி பகுதி. இங்கு ஓம்சக்திநகர், பொன்னுசாமி நகர், நேதாஜி நகர் என பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தான் கலெக்டர் அலுவலகம் உள்ளது. கலெக்டர் அலுவலகத்துக்கு வருபவர்கள் வேங்கிக்கால் வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும், கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த பகுதிகளில் தான் சமீபகாலமாக திருட்டுகள் அதிகரித்து உள்ளன. இவர்கள் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கொள்ளையடிக்கின்றனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேங்கிக்கால் நேதாஜி நகர் 7வது தெருவில் ஆவின் அதிகாரி சரவணன் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். கடந்த 21ம் தேதி வேங்கிக்கால் திருவள்ளுவர் நகரில் ஆடிட்டர் நாகராஜன் வீட்டின் பூட்டை உடைத்து எட்டரை சவரன நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள், ₹4 ஆயிரம் திருடி சென்றனர். இந்த திருட்டுகளில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசாரால் கணிக்க முடியவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் திணறி வருகின்றனர். இதுதவிர இப்பகுதியில் இருசக்கர வாகனங்களும் அடிக்கடி திருட்டு போகின்றன. வளர்ந்து வரும் இப்பகுதியில் நாளுக்கு நாள் திருட்டுகள் அதிகரித்து வருவதால் இங்கு வசிப்பவர்கள் பீதியில் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். முன்பெல்லாம் இரவு நேரங்களில் இப்பகுதியில் போலீசார் ரோந்து வருவார்கள். ஆனால் தற்போது போலீசார் ரோந்து வருவதில்ைல. இதனால் இப்பகுதியில் திருட்டுகள் சமீபகாலமாக அதிகரித்து விட்டன என்று இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் இப்பகுதியில் போலீசார் ரோந்து வரவேண்டும் என்றும், அவ்வாறு ரோந்து வந்தால் திருட்டுகள் நடைபெறுவதை தடுக்கலாம் என்றும் இப்பகுதியில் வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Tiruvannamalai Venkikal ,gang ,
× RELATED வாட்டி வதைக்கும்...