சேலம், மே 24: ஓமலூர் சட்டசபை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முடியும் வரை திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் தொடர்ந்து முன்னிலையிலேயே இருந்தார். அவருடைய வெற்றி வாய்ப்புக்கு ஓமலூர் சட்டசபை தொகுதி வாக்குகள் காரணமாக அமைந்தது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணிக்கை கருப்பூர் இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்தது. இதில் ஓமலூர் தொகுதியில் பதிவான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றிலேயே திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 2796 வாக்கு முன்னிலையில் இருந்தார். இதேபோல் ஒவ்வொரு சுற்றிலும் அதிமுக வேட்பாளர் சரவணனை விட பார்த்திபன் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் வாக்குகள் முன்னிலையிலயே இருந்தார். திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றிக்கு ஓமலூர் சட்டசபை தொகுதி முக்கிய காரணமாக இருந்தது.