×

சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மீண்டும் நிரூபித்த வாக்காளர்களுக்கு நன்றி

சேலம், மே 24:  சேலம் மாவட்டத்தை மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போல் திமுகவின் கோட்டையாக மாற்றிய தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி கூறினார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், நிருபர்களிடம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மக்கள் மாற்றியிருக்கிறார்கள். மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மாவட்டத்தை எப்படி வைத்திருந்தாரோ, அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தை தனது கோட்டையாக மாற்றி இருக்கிறார். சேலம் மாவட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தோழமை கட்சியினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு அதிகப்படியான வாக்குகளை அளித்த பொதுமக்களுக்கும் நன்றி கூறுகிறேன். சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, 40 சதவீத கமிஷனுக்காக மட்டுமே பாலம் அமைத்து இருக்கிறார். சேலத்தில் இருந்து எடப்பாடிக்கு, அவரது வீட்டுக்குச் செல்ல வசதியாக மட்டும் சாலை போட்டிருக்கிறார். கிராமப்புற பகுதிகளில் வட்டச்சாலை, ஆரச்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுக்கவில்லை.

இதற்கெல்லாம் மக்கள் தக்க பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவுக்கு அதிக வாக்குகள் அளித்து என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில், 10 ஆயிரம் வாக்குகள் நான் கூடுதலாகப் பெற்றிருக்கிறேன். அதேபோல் மற்ற சட்டமன்ற தொகுதி பகுதியிலும் அதிக வாக்குகளை பெற்று உள்ளேன். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதன்பின் ஒவ்வொரு திட்டங்களாக மக்களுக்கு நிறைவேற்றிக் கொடுப்போம். வாக்குறுதி அளித்தபடி மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் செயல் படுத்துவோம்.  இவ்வாறு எஸ்.ஆர். பார்த்திபன் கூறினார். முன்னதாக சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கட்சித் தொண்டர்களும் உற்சாக கோஷம் எழுப்பி வாழ்த்தினர்.

Tags : voters ,district ,Salem ,Dwarka Fort ,
× RELATED 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்,...