தேங்காய் பறித்த போது மாரடைப்பு ஏற்பட்டு தொழிலாளி சாவு

பவானி, மே 23: பவானி அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறித்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தொழிலாளி இறந்தார். பவானியை அடுத்த குறிச்சி கரட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (60). மரம் ஏறும் தொழிலாளி. இவர் நேற்று காடப்பநல்லூர் பகுதியில் அங்கமுத்து என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில்  தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று காலை முதல் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். சுமார் 40 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தபோது மாரிமுத்துவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.வலியால் துடித்த அவர், கீழே இறங்க முயன்றபோது மரத்தில் பிடிப்புக்காக காலில் கட்டியிருந்த கயிறு சிக்கியதால் தலைகீழாக தொங்கினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் காந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வந்து தென்னை மரத்தில் தொங்கியபடி இருந்த மாரிமுத்துவை ஏணி வைத்து மேலே ஏறி கீழே இறக்கினர்.  இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மாரிமுத்துவை பரிசோதனை செய்தபோது  அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்தனர்.

Related Stories: