×

பூதப்பாண்டி அருகே இளம்பெண்ணின் விரல், தலைமுடியை வெட்டி சித்ரவதை

பூதப்பாண்டி, மே 23: பூதப்பாண்டி  அருகே நடத்தை சந்தேகத்தால் இளம்பெண்ணின் விரல், தலைமுடியை வெட்டி சித்ரவதை  செய்ததாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்த ஈசாந்திமங்கலம்  அருகே உள்ள அண்ணா காலனியை சேர்ந்தவர் பீட்டர் (38). இவரது மனைவி நளினி  (24). கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து  வந்தது. நடத்தையில்  சந்தேகப்பட்டு தனது மனைவி நளினியை பீட்டர் அடித்து சித்ரவதை செய்ததாக  கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையிலும் கணவன்,  மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம்  அடைந்த  பீட்டர் மற்றும் அவரது தாயார் பாலம்மாள் ஆகியோர் சேர்ந்து நளினியை  சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். மரக்கட்டையால் கை, கால்களில்  அடித்து  காயம் ஏற்படுத்தியவர்கள், கட்டிட வேலைக்கு பயன்படுத்தும்  கரண்டியால் ஆள்காட்டி விரலை வெட்டி உள்ளனர். மேலும் தலைமுடியை கத்திரிகோலால்  வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் நளினி படுகாயம் அடைந்தார்.
இது  குறித்து அக்கம் பக்கத்தினர் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு தகவல்  தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

  பின்னர் நளினி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மாரிசெல்வன் விசாரணை  நடத்தி, பீட்டர் மற்றும் அவரது தாயார் பாலம்மாள் ஆகியோர் மீது இந்திய  தண்டனை சட்டப்பிரிவு 294 (பி), 323, 324, 342, 355, 506 (2) ஆகிய 6  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதில் பீட்டர் கைது  செய்யப்பட்டார். பாலம்மாளை போலீசார் தேடி வருகிறார்கள். படுகாயம் அடைந்த நளினி  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  உள்ளார்.

Tags : boltpandi ,
× RELATED பூதப்பாண்டி அருகே மண்ணில் புதைந்த பெயின்ட் லாரி