திருச்சி- திண்டுக்கல் சாலையில்வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் தெரு நாய்கள் l அப்புறப்படுத்தாமல் விடும் அவலம் l சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

திருச்சி, மே 23:  திருச்சி-திண்டுக்கல் சாலைகளில் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் தெரு நாய்களை உடனடியாக அப்புறப்படுத்தாமல் விடுவதால் சுகாதார சீர்கேடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மாடுகள், பன்றிகள், தெரு நாய்கள், குதிரைகள் போன்றவை எவ்வித கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. குறிப்பாக கருமண்டபம், கே.கே.நகர், காஜாமலை, உறையூர், காந்தி மார்க்கெட், அரியமங்கலம், கீழரண் சாலை, புத்தூர், வயலூர் ரோடு போன்ற பகுதிகளிலுள்ள சாலைகளில் திரியும் இவற்றால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இப்பகுதியில் நடந்து செல்வோரை மாடுகள் முட்டி தள்ளுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் இவர்கள் தப்பியோடும்போது அவ்வழியே வரும் வாகனங்களில் சிக்கி விபத்திற்குள்ளாகி வரும் சூழல் நிலவுகிறது. அரியமங்கலம் பகுதியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

இவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  இதற்கிடையில் கருமண்டபம் முதல் ராம்ஜிநகர் வரையிலான சாலை இருவழிச்சாலையாக மாற்றப்பட்டதால் போக்குவரத்து தங்குதடையின்றி நடந்து வருகிறது. ஆனால், இப்பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்கள் சாலையை கடக்கும்போது அவ்வழியே வரும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கிறது. அவ்வாறு இறக்கும் நாய்களை அப்புறப்படுத்தாமல் இருப்பதால் அவ்வழியே வரும் ஏராளமான வாகனங்கள் அவற்றின் மீது ஏறி நசுக்கி செல்கிறது. இதனால் நாய் உடல் சிதைந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் உயரிழந்த நாயை அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள் கடித்து குதறுகிறது. இதனால் அந்த நாய்களுக்கு வெறிபிடிக்கும் அவலமும் ஏற்படுகிறது. இவைகள் கடித்து விடுமோ என பொதுமக்களும் பீதியடைகின்றனர்.  இதில் சில நாட்களுக்கு முன் ஆர்டிஓ அலுவலகம் அருகே சாலையோரம் விபத்தில் சிக்கி உயிரிழந்த நாய் ஒன்று அழுகி மண்ணோடு மண்ணாகி போனது. இந்த சமயத்தில் அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்துடன் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனாலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சாலையில் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் பிராணிகள் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை வேண்டும் என்பதே பொதுமக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.துறையூர் அருகே நாகலாபுரத்தில்முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

Related Stories: