குலுக்கல் முறையில் வாக்கு எண்ணும் பணியாளர்கள் தேர்வு பொதுப்பார்வையாளர், கலெக்டர் முன்னிலையில் நடந்தது

திருச்சி, மே 23:  சாரநாதன் பொறியியல் கல்லூரியில் திருச்சி மக்களைவை தொகுதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள 288 மத்திய, மாநில அரசுப் பணியாளர்களுக்கான கணினி முறையில் குலுக்கல் தேர்வு தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நேற்று நடந்தது.

 மக்களவை தேர்தல் பொது பார்வையாளர் அமித்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் சிவராசு தலைமை தலைமை வகித்தார். திருச்சி மக்களவை  தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் துவங்குகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிளிலும் எண்ணப்படும் வாக்குகளை சுற்றுவாரியாக பிளக்ஸ் பேனரில் எழுதி தெரிவிக்க தயார் நிலையில் உள்ளது. 288 மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

 ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணுவதற்கான 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் மத்திய அரசில் பணிபுரியும் நுண்பார்வையாளர் ஒருவரும், மாநில அரசில் பணிபுரியும் பணியாளர் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளராகவும், உதவியாளர் ஒருவரும் என ஒரு மேஜைக்கு 3 பேர் வீதம் மொத்தம் 252 பணியாளர்களும் மற்றும் 36 மாற்றுப் பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பர்.இவர்கள் எந்தெந்த சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனர் என்பதை கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். திருச்சி தொகுதியில் 288 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு மேஜைக்கும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் ஒரு அறைக்கு 16 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிக்கும் மொத்தம் 96 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் தனி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்திற்குள் செல்போன்  எடுத்துவர அனுமதி இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 (விவிபாட்) வாக்களிப்பதை உறுதி செய்யும் கருவிகளில் உள்ள வாக்குச் சீட்டுகள் எண்ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பெட்டிகளையும் மேலும் அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளையும் மக்களவை தேர்தல் பொது பார்வையாளர் அமித்குமார், கலெக்டர் சிவராசு ஆகிய இருவரும் பார்வையிட்டனர்.  ஆய்வின் போது ரங்கம் உதவி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், திருச்சி ஆர்டிஓ அன்பழகன், கலெக்டர் பிஏ (தேர்தல்) தாமோதரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) அன்பரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, தாசில்தார்கள் திருவெறும்பூர் அண்ணாதுரை. திருச்சி மேற்கு ராஜவேல், திருச்சி கிழக்கு சண்முகவேலன், ஸ்ரீரங்கம் கனகமாணிக்கம், தேர்தல் (தனி) முத்துசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: