கும்பகோணம், மே 23: கும்பகோணம் அருகே ஆற்றின் கரையில் முதியவர் இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ஆற்றில் இறங்கும்போது கால்தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருநீலக்குடி மாங்குடி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (56). இவருக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு சென்ற ஜெயராமன் அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டுக்கு பின்புறம் ஓடும் தீர்த்தமன்னாறு கரையில் மர்மமான முறையில் ஜெயராமன் இறந்து கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் திருநீலக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் ஆற்றில் இறங்கும்போது கால் தவறி விழுந்து இறந்தாரா அல்லது ஆற்றில் மூழ்கி இறந்தாரா என்பது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.