×

தஞ்சை மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதி விவசாயிகளும் தவிப்பு

கொள்ளிடம், மே 23: தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகி-்ன்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகிறது. மின்சாரம் இடையிலேயே தடைபடுவதால் வீடுகளில் மின்விசிறி செயல்படாமல் கொசுக்கடியால் அவதிப்படும் நிலையும், காலை பொழுதில் ஏற்படும்  மின்தடையால் கிராமங்களுக்கு வழக்கமாக பொது குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க முடியாத நிலையும் ஏற்படுகிறது. குழாய்கள் மூலம் தண்ணீரை எடுத்து அனுப்புவதற்கு மின்சாரம் தடைபடும்போது மின்மோட்டார் இயங்காமல் போகிறது. இதனால் வழக்கமாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுவதால் கிராம மக்கள் அவதியடைகின்றனர்.இதேபோல் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கிராமங்களுக்கு குடிநீர் உரிய நேரத்தில் சென்று சேருவதில் தடையும், தாமதமும் ஏற்படுகிறது. மின்தடையால் பள்ளி மாணவர்கள் உரிய சான்று வேண்டி இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க சிரமப்பட்டு வருகின்றனர்.

மின் தடையால் ரேஷன் கடைகளில் ஸ்மார்டு கார்டை பயன்படுத்தி அத்யாவசிய பொருட்களை உரிய நேரங்களில் வாங்க முடியாமல் குடும்ப அட்டைதாரர்கள் அவதிப்படுகின்றனர். தற்போது குறுவை சாகுபடி செய்வதில் விவசாயிகள் தீவிரம் காட்டும் வேளையில் மின்தடையால் மின்மோட்டார் இயங்காமல் போவதால் தண்ணீரை பயன்படுத்தி விவசாய பணியை மேற்கொள்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. இணையதளத்தின் மூலம் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் செய்வதும் மின்தடையால் தாமதமாகிறது. எனவே அடிக்கடி மின்தடை ஏற்படாதவாறு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : district ,Tanjore ,
× RELATED நேர்மையாக எனது வாக்கை செலுத்துவேன்...