ஆத்தூர், மே 23: ஆத்தூர் நகராட்சி கோட்டை பகுதிக்கு செல்லும் பாலத்தில், மின்விளக்குகள் சீரமைக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆத்தூர் நகராட்சியின் வடக்கில் கோட்டை பகுதியில், பிரசித்தி பெற்ற சிவன், பெருமாள் கோயில்களும், வடக்குகாடு, முள்ளுவாடி உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன. இந்த பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோட்டை, வடக்குகாடு பகுதியில் தான் ஆத்தூர் நகருக்குள் வரும் தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு பகுதியும் உள்ளது. தினசரி அதிகாலையில் இந்த சர்வீஸ் சாலையில் அதிக அளவில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இப்பகுதியில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், இப்பகுதியில் போதிய மின்விளக்கு வசதியில்லாததால், பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து இந்த பகுதி மக்கள் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதியிடம், வசிஷ்ட நதி பாலம் மற்றும் முள்ளுவாடி, கோட்டை பகுதியில், மின் விளக்குகளை சீர் செய்ய கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் முதல், இந்த பகுதியில் மின் விளக்குளை சீரமைக்கும் பணியில், நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.