×

பகல் நேரங்களில் அனல் காற்றுடன் தாக்கும் வெயில் வெளியில் தலைகாட்ட மக்கள் அச்சம்

சிவகங்கை, மே 23: சிவகங்கை மாவட்டத்தில் அனல் காற்றுடன் கடுமையான வெயில் அடித்து வருவதால் முதியோர், குழந்தைகள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாமை, காலம் தவறிய பருவ மழை உள்ளிட்டவற்றால் நீர் நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகின்றன. மார்ச் முதல் ஜூன் வரை வெயில் இருந்தாலும் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டுமே கடுமையான வெயில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே கடுமையான வெயில் அடிக்க தொடங்கியது. அக்னி நட்சத்திரம் மே 4ல் தொடங்கியது. இந்நிலையில் ஏப்ரல் மாத இறுதி முதல் அவ்வப்போது அனல் காற்று வீசி வருகிறது. கடந்த சில நாட்களாக கடும் வெயிலுடன் அனல் காற்று வீசுகிறது. காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை சாலைகளில் அனல் காற்று வீசுகிறது. அதன் பிறகே காற்றில் வெப்பத்தின் தாக்கம் குறைகிறது.

மார்ச் முதல் ஜூன் வரை வெயில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வெயிலோடு அனல் காற்றும் வீசுவதால் அனைவரும் கடும் அவதியடைந்து வருகின்றனர். முதியோர், குழந்தைகள் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  காலை மாலை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் நகர்ப்பகுதிகள், பிரதான சாலைகள் கூட ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பொதுமக்கள் கூறுகையில், முந்தைய ஆண்டுகளில் நவம்பர், டிசம்பரில் பெய்யும் மழை நீர் கோடை காலம் வரை இருக்கும். இதனால் வெயிலின் தாக்கம் தெரியாது. இந்த ஆண்டு இதுவரை கோடைமழை தொடங்கவில்லை. இதனால் கடுமையான வெப்பம் உள்ளது. வெயிலால் கடும் அவதியடைந்து வருகிறோம். மழை பெய்தால் மட்டுமே வெப்பம் குறையும் என்றனர்.

Tags :
× RELATED மது விற்றவர் கைது