×

வண்டலூர் அருகே பரபரப்பு கள்ளக்காதலை கைவிடாத தாய் சரமாரி குத்தி கொலை

சென்னை, மே 23: கள்ளக்காதலை கைவிட மறுத்த தாயை, மகன் கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் வண்டலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.வண்டலூர் அடுத்த மண்ணிவாக்கம், கக்கன் தெருவை சேர்ந்தவர் அன்பு. இவரது மனைவி பவானி (40). இவர்களுக்கு ஒரு மகள், சம்பத் (22) உள்பட 2 மகன்கள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியே குடும்பத்துடன் வசிக்கிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அன்பு இறந்துவிட்டார்.இதையடுத்து பவானி, படப்பை அடுத்த சோமங்கலத்தில் கட்டிட வேலை செய்து வந்தார். அப்போது, அங்கு வேலை பார்க்கும் மேஸ்திரி ராஜா (எ) ராஜ்குமாருடன் (45) பவானிக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர், அவர்களுக்கு கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த பவானியின் மகன் சம்பத், தாயை பலமுறை கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையொட்டி, பவானி வீட்டுக்கு வருவதில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பவானி, கள்ளக்காதலனுடன் மண்ணிவாக்கம் பகுதியில் பைக்கில் சென்றார். அதை பார்த்த சம்பத் அதிர்ச்சியடைந்தார். உடனே, அவர்களை பைக்கில் பின் தொடர்ந்து விரட்டி சென்றார். மகன் பின் தொடர்வதை பார்த்த பவானியின் கள்ளக்காதலன், தனது பைக்கை வேகமாக ஓட்டினார்.

அப்போது, அங்கிருந்த வேகத்தடையில் பைக் ஏறி இறங்கியதில் நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்தனர். அங்கு சென்ற சம்பவத், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பவானியின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். ராஜ்குமாரையும் தாக்கினார். இதில் பவானி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதை பார்த்ததும் ராஜ்குமார் அங்கிருந்து தப்பிவிட்டார்.தகவலறிந்து ஓட்டேரி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பத்தை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : fire ,Vandalur ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா