விழுப்புரம், மே 23: விழுப்புரம்-புதுச்சேரி இடையே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதுச்சேரிக்கு சென்று வருகின்றனர். புதுச்சேரியில் தொழில் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் வேலை வாய்ப்பிற்காகவும், அடுத்தபடியாக ஜிப்மர், ராஜிவ்காந்தி குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்டவைகள் இருப்பதாலும், மருத்துவ பயன்பாட்டிற்காகவும், ஆரோவில், கிழக்கு கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் இருப்பதாலும் தினசரி ஆயிரக்கணக்கானோர் புதுச்சேரிக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக வேலைவாய்ப்பு, மருத்துவம் தொடர்பாக காலை 6 மணி முதல் 10 மணி வரை புதுச்சேரிக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் கூட்டம் நிரம்பியே செல்லும். படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்துகொண்டு சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது.