சாமி ஊர்வலத்தில் கல்வீசி தாக்கிய வாலிபர் கைது

வானூர், மே 23:  வானூர் அருகே ஒட்டை கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் திங்கட்கிழமை காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முக்கிய வீதிகள் வழியாக சாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மர்மநபர்கள் திடீரென கல்வீசி தாக்கினர். இதில் சாமிக்கு தீபாராதனை செய்ய வந்த 2 பெண்கள் மற்றும் ஊர்வலத்தில் வந்த ஒரு ஆண் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஊர்வலத்தில் வந்தவர்கள் சாமியை அப்படியே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். படுகாயம் அடைந்த 3 பேரும் வானூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதுகுறித்து வானூர் போலீசார் வழக்கு பதிந்து, ஒட்டை பகுதியை சேர்ந்த ராஜாமணி (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: