தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி, மே 23: தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை  நடைபெற்று வருவதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் இயங்கிவரும் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர விரும்புவோர் 12 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும் 25 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். குரலிசை, பரத நாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் கால அளவு மூன்று ஆண்டுகள் ஆகும். இப்பள்ளியில் பயிலுகின்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ, மாணவிகளுக்கு அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளியிடங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பேருந்து கட்டண வசதியும் செய்து தரப்படும்.

மூன்று ஆண்டுகள் பயின்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசைக் கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. கோயில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இசைப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. எனவே, கலை ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களை தலைமை ஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, 40 வி.வி.டி சாலை, டூவிபுரம் 11ம் தெரு, தூத்துக்குடி 3 என்ற முகவரியில் நேரடியாகவும், 9487739296 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: