கோவில்பட்டி, மே 23: கோவில்பட்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் பெண் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. தமிழகத்தில் கோடை வெயில் தொடர்ந்து கொளுத்தி வருகிறது. இதே போல் நெல்லை மாவட்டம், தாழையூத்து வனப்பகுதியிலும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் அதிகரித்துகொண்டே வருகிறது. நேற்றும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் இங்குள்ள பெண் புள்ளி மான் ஒன்று, தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. பின்னர் இந்த புள்ளிமான் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் நான்குவழிச்சாலை சந்திப்பு ரோட்டில் சென்று கொண்டிருந்தது. புள்ளிமானை பார்த்த அங்கிருந்த நாய்கள், அதனை விரட்டிச்சென்று கடித்துக் குதறின. இதில் படுகாயமடைந்த புள்ளிமான் உயிருக்கு போராடிய நிலையில் நாலாட்டின்புதூர் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்தது. வீட்டிற்குள் உடலில் காயங்களுடன் புகுந்த புள்ளிமானை பொதுமக்கள் காப்பாற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்ற கோவில்பட்டி வனக்காவலர் சிவராமனிடம் கிராம மக்கள் புள்ளிமானை ஒப்படைத்தனர்.