தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உள்பட இருவர் சாவு

தூத்துக்குடி, மே 23: தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உள்பட இருவர் பரிதாபமாக இறந்தனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்தவர் சிபி (25). இவர் கடந்த சில மாதங்களாக தூத்துக்குடி சின்னக்கண்ணுபுரத்தில்  தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று மாலை  டூவிபுரம் 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த கிரவுண்ட் எர்த் கம்பியை பிடித்துள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த மத்தியபாகம் போலீசார், சிபி  உடலை மீட்டு தூத்துக்குடி  அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிபியின் மனைவி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கழுகுமலை: கழுகுமலையில் மின்சாரம் பாய்ந்ததில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார்.

கழுகுமலை வின்சென்ட் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கற்பகவல்லி (37). தம்பதிக்கு மகா காயத்ரி (16) என்ற மகள் உள்ளார். மணிகண்டன் குவைத் நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் வின்சென்ட் நகர் பகுதியில் புது வீடு கட்டி வருகின்றனர். இதற்காக அங்கு தற்காலிக மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று புது வீட்டு கட்டிட தொட்டியில் இருந்து கற்பகவல்லி தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கழுகுமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: