கடையம், மே 23: கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் உள்ள சுரங்கப்பாதையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து காயமடைவதால் வேகத்தடை அமைக்க கோரிக்கை வலுத்து வருகிறது. கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் நெல்லை - செங்கோட்டை ஆளில்லா ரயில்வே கேட்டை அகற்றிவிட்டு அங்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்தாண்டு தொடங்கப்பட்டு தற்போது பணிகள் நிறைவடைந்து விட்டது. இந்த சுரங்கப்பாதை வழியை ராமலிங்கபுரம், மீனாட்சிபுரம், ராஜாங்கபுரம், கோவிந்தபேரி, செட்டிகுளம், கல்யாணிபுரம், சம்பன்குளம், சிவசைலம், கருத்தப்பிள்ளையூர், மாலிக் நகர், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கடையத்தில் இருக்கும் பள்ளி மற்றும் டியூசன் சென்டர்களுக்கு குக்கிராமத்தில் இருந்து வரும் மாணவ, மாணவிகளும் இந்த பாதை வழியாக சென்று வருகின்றனர்.