×

கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி சிகிச்சை பலனின்றி சிறுமி சாவு பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

பெரணமல்லூர், மே 23: பெரணமல்லூர் அருகே கடன் தொல்லையால் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த இமாபுரம் இமாகுர்ஆன் பகுதியை சேர்ந்தவர் சீனு(32). இவரது மனைவி விஜயலட்சுமி(27). மகள்கள் பிரியதர்ஷினி(12), திவ்யதர்ஷினி(10). மகன் ரித்திக் ரோஷன்(3). சீனு தனது மனைவி விஜயலட்சுமி பெயரில், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ₹8 லட்சம் கடன் பெற்று, மினிலாரி ஒன்றை வாங்கினார். ஆனால், சீனு கடந்த 4 மாதமாக தவணை தொகையை செலுத்தவில்லையாம். கடந்த 20ம் தேதி அவரது வீட்டிற்கு வந்த பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள், தவணைத்தொகையை கட்டும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த சீனு குடும்பத்தினர் நேற்று முன்தினம், குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மயங்கிய நிலையில் கிடந்த 5 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் விஜயலட்சுமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். மற்றவர்கள், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ரித்திக் ரோஷனும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும், சீனு, அவரது மகள்கள் பிரியதர்ஷினி, திவ்யதர்ஷினி ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திவ்யதர்ஷினி நேற்று காலை உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...