சுரண்டையில் பட்டப்பகலில் பரபரப்பு திருமண ஆசைகாட்டி முதியவரிடம் நூதனமுறையில் 4 பவுன் அபகரிப்பு

சுரண்டை, மே 22:   நெல்லை மாவட்டம், ஊத்துமலை  அடுத்த மருக்கலாங்குளத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன்(68). இவரது மனைவி அழகாத்தாள். தம்பதிக்கு  அந்தோணிராஜ், முத்துபாண்டியன் என இரு மகன்கள். இவர்களில் திருமணம் ஆகாமல் அந்தோணிராஜ் இறந்துவிட்டார். இதேபோல் ராணுவத்தில் பணியாற்றி வந்த முத்துபாண்டியன் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து மத்திய அரசு பணி கிடைக்கப்பெற்ற அவரது மனைவி  தனது இரு  குழந்தைகளுடன் சென்னை சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்தாண்டு  அழகாத்தாள் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் தனியாக வசித்துவந்த தங்கபாண்டியனின் வீட்டிற்கு சம்பவத்தன்று காலை  30 வயதான இளம்பெண்ணுடன் வந்த  புரோக்கர் ஒருவர், அந்த பெண்ணின் பெயர் ஜெயந்தி என்றதோடு ஆதரவற்ற நிலையில் உள்ள அந்த பெண், கீழசுரண்டையில் உள்ள தையல் கடையில் வேலைபார்த்து வருவதாக கூறினார். மேலும், இளம்பெண்ணை திருமணம்  செய்துகொண்டால் கடைசி காலத்தில் உதவியாக இருக்கும் என்றார். அப்போது இளம்பெண்ணும் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிப்பதாகக் கூறினார்.

 அதே வேளையில் புரோக்கர் மற்றொரு அறையில்  வைக்கப்பட்டிருந்த தங்கப்பாண்டியன் மனைவியின் 3 பவுன் நகைகளை திருடி தனது கைப்பையில் வைத்துகொண்டார். மேலும் உடனே  கோயிலில் திருமணம் செய்வதற்கான தாலிச்சரடு வாங்கவேண்டும் எனக்கூறினார். அதன்பேரில் சுரண்டையில் உள்ள நகைகடைக்கு ஒரே பைக்கில் 3 பேரும் சென்றனர். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு  தாலி மற்றும் மூக்குத்தி என ஒரு பவுனுக்கு நகையை தங்கபாண்டியன் வாங்கிக்கொடுத்தார். பின்னர் அதே பைக்கில் கீழ சுரண்டைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். வரும் வழியில் ஆடை மாற்றிவரும் வரை பஸ் நிறுத்தம் பகுதியில் இருக்குமாறு கூறிச்சென்ற இளம்பெண்ணும், அவரைத் தொடர்ந்து புரோக்கரும் அடுத்தடுத்து அங்கிருந்து எஸ்கேப் ஆகினர். இருவரும் நீண்டநேரமாகியும் திரும்பாததால் நகை பறிபோனது தங்கபாண்டியனுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சுரண்டை போலீசார் வழக்குப் பதிந்து நகை அபகரித்து சென்ற இளம்பெண்ணையும், புரோக்கரையும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர்.   கடந்த 15 நாட்களுக்கு முன்பு மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை பெற்று தருவதாகக் கூறி மர்மநபர் 5 பவுன் நகையை அபகரித்து சென்றார். அதன்சுவடு மறைவதற்குள் தற்போது நடந்துள்ள சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: