ஆனைமலை விற்பனை கூடத்தில் ரூ.21 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

பொள்ளாச்சி. மே 22:   பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று, ரூ.21லட்சத்துக்கு கொப்பரை ஏலம்போனது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்தின்போது ஆனைமலை மற்றும் கோட்டூர், ஆழியார், அங்கலக்குறிச்சி, சேத்துமடை, ஒடையக்குளம், சுப்பேகவுண்டன்புதூர் உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களை சேர்ந்த 98 விவசாயிகள் மொத்தம் 594 மூட்டை கொப்பரை கொண்டு வந்திருந்தனர்.

அவை முதல் தரம், இரண்டாம் தரம் என பிரிக்கப்பட்டு, விற்பனை கூட கண்காணிப்பாளர்(பொறுப்பு) மணிவாசகம் முன்னிலையில் ஏலம் விடப்பட்டது.  இதில், முதல் தரம் 313 மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.82 முதல் அதிகபட்சமாக ரூ.89.50 வரையிலும், இரண்டாம் தரம் 278 மூட்டை கொப்பரை ஒருகிலோ ரூ.52.85 முதல் ரூ.68.10 வரையிலும் என விவசாயிகள் கொண்டு வந்த, 30 டன் கொப்பரை ரூ.21 லட்சத்துக்கு ஏலம்போனது.   

இதை 13 வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை குறைவால், ஒழுங்குமுறை விற்பனை கூடத்திலும் விவசாயிகள் கொண்டுவந்த கொப்பரைகள் கடந்த வாரத்தைவிட சராசரியாக ரூ.4 முதல் ரூ.7 வரை என குறைவான விலைக்கு ஏலம் போனதாக, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: