பாலக்காடு, மே 22 : சித்தூர் கடம்பிடி மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. பாலக்காடு சித்தூர் கடம்பிடி மாரியம்மன் கோயிலில் ஆண்டுந்தோறும் வைகாசி மாதம் 3 நாட்கள் பொங்கல் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
சித்தூர் சோகநாஷினி நதியில் இருந்து அலங்கரித்த மூன்று யானைகள் மீது செண்டை வாத்தியத்துடன் தீர்த்தக்குடம் ஏடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நேற்று நடந்தது. இதைத்தொடர்ந்து, அம்மனுக்கு பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் படைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து அலங்கரித்த மூன்று யானைகள் மீது அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்று இரவு பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனை வழிபட்டனர்.