வீரகனூர் சந்தைப்பேட்டையில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதி

கெங்கவல்லி, மே 22: சேலம் மாவட்டம் வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டு சந்தைப்பேட்டை பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக முறையாக குடிநீர் வழங்காததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை கண்டித்து, கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீரகனூர் பேரூராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அதிகாரிகள் தரப்பில் சீரான குடிநீர் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி கூறியதின்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் மெத்தனப்போக்கு காட்டி வருகின்றனர். இதனால், தினசரி தேவைக்கான தண்ணீர் கிடைக்காமல், மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, சாலை மறியல் ேபாராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: