ஊட்டியில் இடியுடன் கன மழை

ஊட்டி, மே 22:  ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நிறைவு விழா நேற்று மாலை 4.30  மணிக்கு நடந்தது. அப்போது திடீரென கன மழையும் துவங்கியது. இந்த மழை சுமார்  அரை மணி நேரம் நீடித்தது. இதனால், பூங்காவின் பல்வேறு பகுதிகளிலும்  சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் மரங்களின் அடியில் ஒதுங்கினர்.  பெரிய புல் மைதானத்திற்குள் இருந்தவர்கள் அனைவரும் பூங்காவில்  அமைக்கப்பட்டிருந்த மேடைக்குள் தஞ்சமடைந்தனர்.

சிலர் கொட்டும் மழையிலும்  பூங்காவை கண்டு ரசித்தனர். பூங்கா நுழைவு வாயில் பகுதியில் தண்ணீர்  தேங்கியதால், அதனை கடந்துச் செல்ல சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். மேலும், மழை பெய்த சமயத்தில் அனைவரும் பூங்காவை விட்டு ஒரே சமயத்தில்  வெளியேறினர். மேலும், தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு அறைகளை தேடியும்,  வெளியூர்களுக்கும் புறப்பட்டனர். இதனால், நகரில் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்பட்டது. மேலும், இடைவிடாமல் பெய்த மழை காரணமாக நகரில் குளிர்  நிலவியது. அதேசமயம் மழை ஓய்ந்த பின் சுற்றுலா பயணிகள் மீண்டும் தாவரவியல்  பூங்காவை முற்றுகையிட துவங்கினர்.

Related Stories: