போச்சம்பள்ளி மே 22: மத்தூர் அடுத்த சிவம்பட்டியில் தர்மபுரி-திருப்பத்தூர் சாலை விரிவுபடுத்தும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி இரவு நேரங்களில் நடப்பதால், அவ்வழியாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த வாரம் இரவு, கருங்காலிப்பட்டியை சேர்ந்த மணி(46) என்பவர் டூவீலரில் சாலை அமைக்கும் பகுதியில் சென்றுள்ளார். அப்போது, இருட்டில் அங்கிருந்த ஜல்லி குவியலில் மோதி கீழே விழுந்துள்ளார். இதுபோன்று அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இரவு நேரத்தில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு திருப்பத்தூர்-தர்மபுரி சாலை, சிவம்பட்டி அரசு பள்ளி அருகே மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் சாலை அமைக்கும் பணி முடிக்கப்படும். வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வு பலகை வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்பேரில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.