தேன்கனிக்கோட்டை, மே 22: தளி வட்டார வேளாண்மை துறை சார்பில் குஞ்சேன் அக்ரஹாரம் கிராமத்தில் மண் மாதிரி சேகரிப்பு விழிப்புணர்வு நடந்தது. இதுகுறித்து தளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுரேஷ்குமார் கூறியது: தளி வட்டாரத்தில் பல்வேறு வகையான வேளாண் பயிர்கள், தோட்டகலை பயிர்கள், மற்றும் பட்டுவளர்சி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாட்டாரத்தில் கரிசல் மண், செம்மண், வண்டல் மண் மற்றும் மணல் கலந்த குறுமன் என பல்வேறு மண் வகைகள் உள்ளன. பயிறுக்கு ஏற்ற நூண்ணுட்ட சத்துக்கள் தொடர்ந்து தேவைப்படுகிறது. செயற்கை ரசாயன உரங்கள் பயன்படுத்தி வந்தால் மண்ணின் வளம் பாதிக்கப்பட்டு மகசூல் பாதிக்கப்படும். மண் ஆய்வு செய்வதன் மூலம் மண்ணின் தன்மை அறிய முடியும். களர், உவர் மற்றும் அமில நிலங்களை அறிந்து அதற்கேற்ப உரமிடவேண்டும். மண் மாதிரிகளை, மண் பரிசோதனை நிலையம் அல்லது நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தில் கொடுத்து ஆய்வு முடிவுகளை பெறலாம். கோடைப்பருவத்தில் மழை பெய்து வரும் சமயத்தில் கோடை உழவுக்கு பிறகு மண் மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்வதால் கோடைப்பருவம் மற்றும் பின்வரும் காரீப் பருவத்தில் சாகுபடி செய்யப்போகும் பயிர்களுக்கு தேவையான உரப்பரிந்துரை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.