அரூர், மே 22: அரூர் பகுதியில், விலை வீழ்ச்சியால் சாலையோரம் பப்பாளி பழங்களை விவசாயிகள் கொட்டிச் செல்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள பப்பாளி பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இங்கு கிலோ ₹6க்கு வாங்கி அங்கு கிலோ ₹25 முதல் விற்பனை செய்து வந்தனர். தற்போது விலை மிகவும் குறைந்து விட்டதுடன், வெயிலுக்கு பழம் ஒரு நாள் கூட தாங்குவது இல்லை. மேலும், பறிக்கும் கூலிக்கு கூட விலை கட்டுப்படியாவது இல்லை என்பதால், சில தோட்டங்களில் பறிக்கப்படாமல் உள்ளதுடன் பழங்கள் சாலையோரம் கொட்டப்பட்டு வருகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நடப்பாண்டில், தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுவதால், பப்பாளி பழங்கள் மரங்களிலேேய அழுகி வருகிறது. மேலும், பறிப்பு கூலி கிடைக்கவில்லை. எனவே, பல்வேறு பகுதிகளில் பறித்த பப்பாளி பழங்கள் சாலையோரத்தில் கொட்டப்பட்டு வருகிறது. இதை கால்நடைகள் உண்டு செல்கின்றன என்றனர்.