எஸ்ஐ, ஏட்டை தாக்க முயன்ற விசி நிர்வாகி உள்பட 3 பேர் கைது திருவெறும்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு

திருவெறும்பூர், மே 22:  திருவெறும்பூர் அருகே பெண்களை கிண்டல் செய்தவர்களை விசாரிப்பதற்காக சென்ற திருவெறும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டை தாக்க முயன்ற விசி கட்சி நிர்வாகி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்ததால் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவெறும்பூர் அருகே கக்கன் காலனி பகுதியில் சிலர் அந்த பகுதியில் செல்லும் பெண்களை கிண்டல் செய்வதாக அந்த பகுதியில் இருந்து மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் உடனடியாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததோடு இச்சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு திருவெறும்பூர் எஸ்ஐ மாரிமுத்து, ஏட்டு ஜெபஸ்டின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்களிடம் கிண்டல் செய்த அதே பகுதியை சேர்ந்த விசி கட்சியின் பகுதி பொறுப்பாளர் தீனா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரிடம்  விசாரித்தபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தீனா மற்றும் அவரது நண்பர்கள் போலீசாரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

 இச்சம்பவம் குறித்து மாரிமுத்துவும், ஜெபஸ்டினும் திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாரிமுத்து, ஜெபஸ்டினிடம் தகராறு செய்து தாக்க முயன்ற தீனா உட்பட 3 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இந்நிலையில் கக்கன் காலனி பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திருவெறும்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தீனா மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் உட்பட 3 பேரையும் விடுதலை செய்யும்படி கூறினர். இதனால் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது. போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதோடு தீனா உட்பட 3 பேரையும் விடுவித்து விடுவதாக கூறி பொதுமக்களை அனுப்பி வைத்தனர்.

Related Stories: