சாயல்குடி, மே 22: முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி சீலக்காரி அம்மன் கோயில் வருடாந்திர வைகாசி பொங்கல் திருவிழா நடந்தது.
கடந்த வெள்ளிக் கிழமை கோயிலில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கணபதி ஹோமம் மற்றும் யாகச்சாலைகள் வளர்க்கப்பட்டு, சீலக்காரி அம்மன், விநாயகர் சிலை மற்றும் பரிவார கிராம தேவதைகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.
அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட 11 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடந்தது. விழாவையொட்டி பெண்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு, பால்குடம் எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவில் உலக நன்மைவேண்டி 108 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.