தஞ்சை புதிய பேருந்து நிலைய கடையில் செல்போன் திருடிய வாலிபரை விரட்டி பிடித்த மக்கள் போலீசார் விசாரணை

தஞ்சை, மே 22: தஞ்சை புதிய பேருந்து நிலைய செல்போன் கடையில் செல்போன் திருடிய ஆசாமியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஆண்டிக்காடு வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனியப்பன். தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று பழனியப்பன் கடையில் இருந்தபோது ஒரு வாலிபர் செல்போன் கடைக்கு வந்தார். அவர் திடீரென அங்கிருந்த புதிய செல்போனை திருடி கொண்டு ஓட்டம் பிடித்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பழனியப்பன் அந்நபரை துரத்தி கொண்டு ஓடினார். அப்போது பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்கள் சிலர் அந்த வாலிபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த ஏழையூரை சேர்ந்த இளங்கோவன் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்நபரை போலீசார் கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: