×

தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்களை எளிதில் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப முறைகள் வேளாண் அதிகாரி ஆலோசனை

புதுக்கோட்டை, மே22:    தென்னையைத் தாக்கும் ரூகோஸ் எனும் சுருள் வெள்ளை ஈக்களை ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறையில்  முற்றிலுமாகக் கட்டுப்படுத்தலாம் என்று புதுக்கோடடை வேளாண்மை இணை இயக்குநர் சுப்பையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் தோன்றிய சுருள் வெள்ளை ஈக்கள், இந்தியாவிலும் பரவியது, குறிப்பாக கேரளாவில் இருந்து இடம் பெயர்ந்து பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் சுருள் வெள்ளை ஈக்களினால் தென்னை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது.  கலப்பின தென்னை மரங்களான குட்டை - நெட்டை மற்றும் நெட்டை - குட்டை வீரிய ஒட்டு இரகங்களை அதிகளவில் தாக்கி இருப்பதும், நாட்டுத் தென்னை மரங்கள் இத்தாக்குதலில் இருந்து தப்பியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னை மரங்களிலும்  வெள்ளை ஈக்களின் பாதிப்பு ஆங்காங்கே தென்படுகிறது.  ரூகோஸ் எனும் சுருள்  வெள்ளை ஈக்கள் தென்னை இலைகளின் சாற்றினை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் தென்னை மகசூல் பாதிப்படைகிறது.  தென்னை மட்டையின் அடிப்பகுதியில் வெள்ளை ஈக்கள் முட்டையிடுவதைத் தடுக்க அதில் தண்ணீரைப் பீய்ச்சியடிக்க வேண்டும்.  ஒரு லிட்டர் தண்ணீரில் 30 மில்லி வேப்பெண்ணெய் அல்லது வேம்பு சார்ந்த பூச்சிமருந்து அசாடிராக்டின் 2 மில்லியை கலந்து தென்னை ஓலையின் அடிப்பகுதியில் தெளிக்கலாம். மேலும், சுருள் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்திட ஆழியாற்றில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் கிரைசோபிட் எனப்படும் இரை விழுங்கி பூச்சிகள் உற்பத்தி செய்யப்பட்டு இலவசமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு 400 பூச்சிகளை விட்டுவிட்டால் அவை சுருள் வெள்ளைப் பூச்சிகளை முட்டை பருவத்தில் இருந்தே அழித்துதொழிக்கும். இதேபோன்று இரைவிழுங்கிப் பூச்சிகளான பொறிவண்டுகள்  போன்றவை இயற்கையாகவே வயல்வெளிகளில் காணப்படும்.  இந்த இறைவிழுங்கி வண்டுகளை அழியாமல் தடுக்க ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளுக்குப் பதிலாக தண்ணீர் மற்றும் வேப்பெண்ணெய் பயன்படுத்தினால் போதுமானது.


சுருள் வெள்ளை ஈக்களால் இலைகளில்  கேப்னோடியம் என்ற கரும்பூசணம் பரவுவதை தடுக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 25 கிராம் மைதா மாவைக் கலந்து அந்தக் கரைசலை தென்னை ஓலைகளின் மீது தெளித்தால் போதும்.  அது போல தென்னை மரத்தில் 6 அடி உயரத்தில் விளக்கெண்ணெய் தடவப்பட்ட 5அடி நீளம் மற்றும் 11க்கு 2 அடி அகல மஞ்சள் நிற பாலிதீன் பேப்பரை ஏகக்ருக்கு 10 எண்கள் தொங்கவிடுவதன் மூலம் அந்த பேப்பரில் வந்து ஒட்டும் வெள்ளை ஈக்களின் எண்ணிக்கையினை கொண்டு அதற்கேற்ப தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். மேலும், தென்னந்தோப்புக்குள் ஆங்காங்கே மின்சார விளக்குகளை மாலை 6 முதல்10 மணிவரை எரியவிட்டால் பூச்சிகள் அதை நோக்கி வரும்.
விளக்குகளுக்கு கீழே தண்ணீரும் சிறிதளவு மண்ணெண்ணையும் கலந்த பாத்திரத்தை வைத்தால் அதில் விழும் பூச்சிகள் இறந்துவிடும்.  இது போல ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மூலம் வெள்ளை ஈக்களை இயற்கையாக முற்றிலுமாக ஒழிக்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Agricultural Officer ,
× RELATED முத்துப்பேட்டை பகுதியில் ஆய்வு நெல்...