×

காரில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி பலி

தாம்பரம்: தாம்பரம் - முடிச்சூர் சாலையில் உள்ள குளக்கரை அருகே நேற்று காலை டிராவல்ஸ் கார் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது. அதில் ஏசி போட்டபடி டிரைவர் தூங்கிக் கொண்டிருந்தார். மதியம் 3 மணி வரை அதே இடத்தில கார் நின்று கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், இதுபற்றி தாம்பரம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கார் கதவை திறக்க முயற்சித்தபோது திறக்க முடியவில்லை. இதையடுத்து, கதவை உடைத்து பார்த்தபோது உள்ளே டிரைவர் அசைவற்று மயங்கிய நிலையில் இருந்தார். இதனால், 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், டிரைவரை சோதனை செய்தபோது, இறந்தது தெரிந்தது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபர் சென்னையை சேர்ந்த குமார் (37) என்பது தெரியவந்தது. கடும் வெயிலில் காரில் ஏசி போட்டு தூங்கியபோது மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : sleeping driver ,
× RELATED காரில் ஏ.சி போட்டு தூங்கிய டிரைவர் மூச்சு திணறி பலி