×

சென்னையில் 3 நாடாளுமன்ற, 1 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களை தேர்தல் அதிகாரி இன்று ஆய்வு: அசம்பாவிதம் தவிர்க்க 3 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் மற்றும் காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று நேரில் ஆய்வு செய்கின்றனர். தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் 30 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல்  மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19ம் தேதி நடந்தது. இதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை எண்ணப்படுகிறது.

அதன்படி, வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு லயோலோ கல்லூரியிலும், தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும் நடக்கிறது.  இந்த மூன்று மையங்களுக்கும் துணை ராணுவம் மற்றும் மாநில காவல் துறையினர் அடங்கிய மூன்று அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதிரி வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அதிகாரிகள் இந்த மையத்தை பார்வையிட்டனர். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை பணியில் மத்திய, மாநில அரசுகளை சேர்ந்த 1800 அதிகாரிகள் ஈடுபடுத்தபட உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் முதல்கட்ட பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இன்று இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்படுகிறது.

சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 18 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 17 தொகுதிகளில் 14 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 30 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவி பேட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை மாவட்டத்தில் மொத்தம் 95 வாக்குச்சாவடிகளில் பதிவான விவிபேட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும். இந்த பணி முடிந்ததும் தேர்தல் முடிவுகள் அறிவிக்க இரவு 9 மணி ஆகும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் மற்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்கின்றனர்.

Tags : Electoral Officer ,Parliament ,Assembly Constituency ,
× RELATED அண்ணாமலை மீதான விதிமீறல் புகார்...