தூத்துக்குடி, மே 22: தூத்துக்குடியில் மாநகராட்சி பூங்காக்களில் பழுதடைந்துள்ள சிறுவர் விளையாட்டு உபகரணங்களால் விபத்து அபாயம் உள்ளதால் அவற்றை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி பகுதியிலுள்ள 60 வார்டுகளில் பெரும்பாலான இடங்களில் மாநகராட்சி சார்பில் சிறுவர் விளையாட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிஞ்சிநகர் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை இதுவரை பொதுமக்கள் பயன்படுத்தவில்லை. கால்நடைகள் தான் அந்த பூங்காவை பயன்படுத்தி வருகிறது. அதற்குள் அங்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் உள்ளிட்ட அனைத்தும் சேதமடைந்துவிட்டது. அதிகாரிகள் கணக்கு எழுதி பணத்தை எடுத்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதேபோன்று ஆசிரியர் காலனி தேவகிநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி விளையாட்டு பூங்கா பராமரிப்பின்றி காணப்படுகிறது. டூவிபுரம் சங்கர நாராயணன் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயத்தில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பூங்காக்களில் முறையான பராமரிப்பு இல்லாமல் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது.