×

முள்ளக்காடு அருகே விபத்தில் பலியான வாலிபர் அடையாளம் தெரிந்தது

ஸ்பிக்நகர், மே 22:  தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை முள்ளக்காடு அருகே உள்ள கக்கன்ஜீ நகர் பகுதியில் நேற்று முன்தினம் கார் மீது பைக் மோதியதில் படுகாயமடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அவர் ஓட்டி வந்த வாகனத்தின் ஆர்சி புக் தகவல்கள் அனைத்தும் மதுரையில் உள்ளவர் பெயரில் இருந்ததால் இறந்தவர் யார்? என்று கண்டறிவதில் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில் இறந்தது தூத்துக்குடி தேவர் காலனி பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் ராமமூர்த்தி (28) என்பது தெரியவந்துள்ளது. இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் உறவினரின் நிச்சயதார்த்த விழாவில் பங்குபெற தூத்துக்குடியில் இருந்து வெள்ளக்கோவிலுக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது முள்ளக்காடு கக்கன்ஜீ நகர் பகுதியில் வந்தபோது நடந்த விபத்தில் ராமமூர்த்தி பலியானார். நேற்று முன்தினம் முதல் ராமமூர்த்தியை காணாமல் தேடிய உறவினர்கள் விபத்தில் பலியானவரின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பார்த்து அடையாளம் கண்டுகொண்டனர். இறந்த ராமமூர்த்திக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்னர் முத்துலெட்சுமி என்பவருடன் திருமணம் முடிந்தது. தற்போது முத்துலெட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

Tags : victim ,accident ,Mullakkadu ,
× RELATED உப்பள தொழிலாளி கொலை; தாயுடன் பழகியதால் மகன்கள் தீர்த்துக்கட்டினர்