காடையாம்பட்டி, மே 21: காடையாம்பட்டி அருகே டேனிஷ்பேட்டை ஊராட்சி ராஜமன்னார் காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வம். இவரது மனைவி கற்பகவள்ளி, டேனிஷ்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பூஜா (12), ரக்க்ஷனா (7), என 2 மகள்கள் உள்ளனர். ஆசிரியை கற்பகவள்ளி, ஈரோடு மாவட்டத்தில் 2005ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து, பல்வேறு ஊர்களில் வேலை பார்த்துள்ளார். இதனால், இவரது மகள்களை சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சொந்த ஊருக்கு மாறுதலாகி வந்தார். தற்போது டேனிஷ்பேட்டை அரசு பள்ளியில் பணியாற்றி வரும் இவர், தான் பணிபுரியும் பள்ளியிலேயே தனது மகள்களை சேர்க்க முடிவு செய்தார். இதையடுத்து, தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் பயின்று வந்த மூத்த மகள் பூஜாவை 7ம் வகுப்பிலும், 2வது மகள் ரக்க்ஷனாவை 2ம் வகுப்பிலும் சேர்த்துள்ளார். தனியார் பள்ளியில் படித்து கொண்டிருந்த மகள்களை, தான் வேலை செய்யும் அரசு பள்ளியிலேயே சேர்த்த ஆசிரியைக்கு, அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.