சேலம், மே 21: சேலம் கருப்பூர் அருகேயுள்ள வட்டக்காட்டை சேர்ந்தவர் சித்தன்(71). சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி விஜயா(64). இருவரும் நேற்று முன்தினம், சேலம் ஏவிஆர் ரவுண்டானா அருகில் உள்ள ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர், இருவரையும் அவர்களது மகன் காரில் ஏற்றிச் சென்று, கருப்பூர் பஸ் நிறுத்தத்தில் இறக்கி விட்டார். அங்கிருந்து பஸ்சில் ஏறிய இருவரும், வெள்ளாளப்பட்டியில் இறங்கி, மாரியம்மன் கோயில் அருகில் நிறுத்தியிருந்த டூவீலரை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, 2 டூவீலரில் அவர்களை பின் தொடர்ந்து வந்த 3 கொள்ளையர்கள், சித்தனின் டூவீலர் மீது மோதினர். இதில் கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, கொள்ளையர்கள் விஜயா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். அதிர்ச்சியடைந்த சித்தன், கருப்பூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.