திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்குகள் எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை

திருச்சி, மே 21: திருச்சி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையமான சாரநாதன் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் அறைகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் சிவராசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குபெட்டிகள் அனைத்தும் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. நாளைமறுநாள் (23ம் தேதி) காலை 8 மணியளவில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டு வாக்குப்பெட்டிகள் எண்ணப்படவுள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் எண்ணப்படும் வாக்குகளை சுற்றுவாரியாக பிளக்ஸ் பேனரில் எழுதி தெரிவிக்கப்படும்.

288 மத்திய மற்றும் மாநில அரசு பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணுவதற்கான 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படவுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் மத்திய அரசில் பணிபுரியும் நுண்பார்வையாளர் ஒருவரும், மாநில அரசில் பணிபுரியும் பணியாளர் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளராகவும், உதவியாளர் ஒருவரும் என ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் வீதம் மொத்தம் 252 பணியாளர்களும் மற்றும் 36 மாற்றுப் பணியாளர்கள் தயார்நிலையில் இருப்பார்கள்.  வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒவ்வொரு மேஜைக்கும் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. வாக்கு எண்ணும் ஒரு அறைக்கு 16 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிக்கும் மொத்தம் 96 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவதை வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் தனி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி கலெக்டர் சிவராசு வாக்கு எண்ணும் மையத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 (விவிபேட்) வாக்களிப்பதை உறுதிசெய்யும் கருவிகளில் உள்ள வாக்குச் சீட்டுகள் எண்ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள பெட்டிகளையும் மேலும் அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டிகளையும் பார்வையிட்டார். ஆய்வின்போது ரங்கம் உதவி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், திருச்சி ஆர்டிஓ அன்பழகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) அன்பரசு, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டி, தாசில்தார்கள் அண்ணாதுரை (திருவெறும்பூர்), ராஜவேல் (திருச்சி மேற்கு), சண்முகவேலன் (திருச்சி கிழக்கு), கனகமாணிக்கம் (ரங்கம்), முத்துசாமி (தேர்தல் தனி) உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: