தஞ்சை, மே 21: தஞ்சை அருகே மெலட்டூரில் பாரம்பரியம் மிக்க பாகவத மேளா கடந்த 17ம் தேதி தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டம் பல்வேறு சிறப்புகளை கொண்ட மாவட்டமாகும். தஞ்சை அருகே மெலட்டூரில் அக்காலத்தில் ஏராளமான இசைக் கலைஞர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் தெலுங்கு மொழியில் அமைந்த பாடல்களுக்கு தமிழை தாய் மொழியாக கொண்ட ஆண்கள் இதிகாச நாயகர்கள், நாயகிகள் போல் வேடமணிந்து மேடையில் தோன்றி நடித்து வந்தனர்.
இதற்கு பாகவத மேளா நாடகம் என அழைக்கப்பட்டு வந்தது. மெலட்டூரில் இந்நாடங்கங்கள் ஒரு வாரத்திற்கு இரவு நேரங்களில் மட்டும் நடைபெறும். அப்போது மின்சாரம் இல்லாததால் எண்ணெய் விளக்கு திரிகளால் ஏற்றப்பட்ட விளக்கொளி பின்னணியில் இந்நாடங்கள் நடைபெறும். தஞ்சை- நாகை சாலையில் சாலியமங்கலம், மெலட்டூர், தேப்பெருமாநல்லூர் போன்ற பகுதிகளில் மட்டும் இந்நாடகங்கள் இன்றும் நடந்து வருகிறது. இதில் மெலட்டூரில் சுமார் 600 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாடகங்கள் அங்குள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் நடைபெறும் நரசிம்ம ஜெயந்தி விழாவில் நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக மெலட்டூரை பூர்வீகமாக கொண்டவர்கள் எங்கிருந்தாலும் வந்து கொள்கின்றனர். இத்துடன் உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தற்போதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாகவத மேளா நாடகங்களை காண திரண்டு வருகின்றனர். நடப்பாண்டு பாகவத மேளா நாடக அரங்கேற்றம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.