கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு முகமூடி அணிந்த 2 மர்மநபர்கள் கைவரிசை

தஞ்சை, மே 21: தஞ்சையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயினை பறித்து சென்ற மூகமூடி அணிந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் தனபாலன் (63). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி சாந்தி (53). கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் மாலை கீழவாசலில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் இரவு 9 மணியளவில் இருவரும் பைக்கில் வீடு திரும்பினர்.

வல்லம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முகத்தை மறைத்து துணி கட்டி கொண்டு பின்னால் பைக்கில் வந்த 2 பேர், சாந்தி கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்தனர். இதில் சாந்தி கீழே விழுந்தார். பின்னர் செயினுடன் கொள்ளையர்கள் பைக்கில் தப்பினர். அவர்களை தனபாலன் பைக்கில் விரட்டி சென்றார். எனினும் பிடிக்க முடியவில்லை. கழுத்தில் காயமடைந்த சாந்தியை தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீசில் சாந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து வழிப்பறி திருடர்களை தேடி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் ஒரு மார்பிள் விற்பனை கடை உள்ளது. அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவில் மர்மநபர்கள், சாந்தியிடம் செயின் பறிப்பது பதிவாகி உள்ளது. அந்த கேமரா காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: