கணவரை ஏமாற்றி ரூ.83 லட்சம் மோசடி மிரட்டல் விடுக்கும் பெண் மீது நடவடிக்கை: கமிஷனரிடம் ஆங்கிலோ இந்திய பெண் புகார்

சென்னை: கணவரை காதல் வலையில் சிக்கவைத்து ரூ.83 லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு ஆங்கிலோ இந்தியன் பெண் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பெரம்பூர் பகுதியில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய பெண் மார்லின் டாக்கெட் (50) என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிரிடெரிக் கிளைவ் பேட்ரிக் டாக்கெட், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். எங்கள் வீட்டின் கீழ் தளத்தில் ஆல்வினா நகோத்தி (28) என்ற பெண் நல்ல முறையில் நட்பாக பழகி வந்தார். இதற்கிடையே கடந்த 17.7.2018ம் தேதி எனது கணவர் சவுதி அரேபியாவிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். நானும் எனது கணவர் வெளிநாட்டில் இருப்பதாக நினைத்தேன்.

  பின்னர் கடந்த 5.9.2018ம் ஆண்டு எனக்கு போன் செய்த ஆல்வினா நகோத்தி உங்கள் கணவர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளார் என்று கூறினார். அதை கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். வெளிநாடு சென்ற கணவர் எப்படி சென்னையில் இருக்கிறார் என்று அச்சத்தில் இருந்தேன். அவசரமாக நான் கணவரை பார்க்க சென்றபோது, மீண்டும் போன் செய்து எனது கணவர் இறந்துவிட்டதாக கூறினார். பின்னர் விசாரித்த போது எனது கணவர் வெளிநாடு செல்வதாக கூறிவிட்டு ஆல்வினா நகோத்தியுடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அந்த சமயத்தில் எனது கணவர் வங்கி கணக்கில் இருந்து ரூ.83 லட்சம் பணத்தை ஏமாற்றி அவரது வங்கி கணக்கிற்கு மாற்றி வீடு, சொகுசு கார்கள் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார்.

என் கணவர் இறப்பில் மர்மம் உள்ளது என்றும், இதனால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அதன்படி  நீதிமன்றம் உத்தரவுப்படி எனது கணவரின் வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆல்வினா நகோத்தி வழக்கில் எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும், பணம் கேட்க கூடாது என்றும் தினமும் என்னை மிரட்டி வருகிறார். எனவே இதுகுறித்து நான் செம்பியம் காவல்நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரின் படி போலீசார் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் கணவரிடம் தவறாக நோக்கத்துடன் உறவு வைத்து கொண்டு பணத்தை ஏமாற்றி மோசடி செய்த ஆல்வினா நகோத்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் எனது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.

Related Stories: