பைக் மீது கார் மோதல்

நாங்குநேரி, மே 21:   பாளை. ஜோதிபுரம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் மகன் பிச்சையா(24). கார் மெக்கானிக்கான இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 18ம் தேதி களக்காடு அருகே தேவநல்லூரில் நடந்த கொடை விழாவுக்காக உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து பைக்கில் ஊருக்கு புறப்பட்டார். அவருடன் தாய் செல்லம்மாள், உறவினர் உமா ஆகியோரும் பைக்கில் வந்தனர். பாணான்குளம் நான்குவழிச்சாலையில் சென்றபோது வள்ளியூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த கார், பைக் மீது மோதியது. இதில் பிச்சையா உள்ளிட்ட 3 பேரும் பைக்கில் இருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர். இவர்கள் உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில் மூன்றடைப்பு எஸ்ஐ ரமேஷ்குமார், கார் டிரைவர் நெல்லையை சேர்ந்த செந்தில்குமார் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: